ஜெய்பீம் படத்தை எதிர்த்து கோரும் 5 கோடி ரூபாய் இழப்பீட்டுத்தொகை முழுமையாக பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாளுக்கு வழங்கப்படும் என பாமக தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக வழக்கறிஞர் பாலு, ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூகத்தினரை இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதால் வன்னியர்சங்கம் சார்பாக அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நோட்டீசுக்கு பதில் எப்படி வருகிறது என்பதை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர், அவதூறு செய்தி பரப்பியதன் மூலம் படக்குழு பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
வன்னியர்களின் உணர்வுகளை நடிகர் சூர்யாவும், இயக்குனரும் புண்படுத்திவிட்டதாக தெரிவித்த பாலு, இழப்பீட்டு தொகையான 5 கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட பார்வதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் முழுமையாக வழங்கப்படும் என்று பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.








