ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
கடந்த முறை ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையின்போது, ஜல்லிக்கட்டு நடைபெறும் முறை குறித்து சிறிய அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோரியதையடுத்து தமிழக அரசு பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. குறிப்பாக, ஜல்லிக்கட்டு அரங்கில் எவ்வாறு ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது? ஜல்லிக்கட்டுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்படுகிறது? வாடிவாசலில் இருந்து காளை வரும்போது 15 மீட்டர் நீள அரங்கில் எவ்வாறு காளையை மாடுபிடி வீரர்கள் அடக்குகிறார்கள்? உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை பிரமாண பத்திரத்தில் எடுத்துரைத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த பிரமாண பத்திரத்தில், “ஜல்லிக்கட்டு என்பது மாவட்ட ஆட்சியர் அனுமதியளித்த பின்னரே நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியை காவல்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, உள்ளிட்ட துறைகள் சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்வர். மாடுபிடி வீரர்கள் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், உரிய தகுதி சான்றிதழ் சமர்பித்த பின்னரே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
காளைகளை உரிய விலங்கு மருத்துவர் பரிசோதிப்பர். குறைந்தது 18 மாதம் வயதான
காளைகளே ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும். காளைகளுக்கு சாராயம், மது, கண்களில் மிளகாய் பொடி தூவுதல் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட சட்ட விரோத செயல்கள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, தகுதி உள்ள காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
50 சதுரமீட்டர் கொண்ட ஜல்லிக்கட்டு அரங்கில் ஒரு சமயத்தில் ஒரே ஒரு காளை மட்டுமே அவிழ்த்து விடப்படும். வாடிவாசலில் இருபுறம் மட்டுமே வீரர்கள் நிற்பர், காளை வரும் பாதையை மறைத்து எவரும் நிற்கமாட்டார். ஒரு சுற்றுக்கு, 25 வீரர்கள் மட்டுமே அரங்கிற்குள் காளையை அடக்க அனுமதிக்கப்படுவர். காளையின் திமிலை, அதனை அடக்கும் பொருட்டு ஒருவர் மட்டுமே பிடிப்பர். அதிகபட்சமாக 30 வினாடிகள் மட்டுமே திமிலை பிடித்து தொங்க முடியும்.
ஒன்றுக்கு மேற்பட்டோர் காளையை அடக்க முற்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவர். காளை அரங்கினுள் இருந்து வெளியேறவில்லை என்றால் காளையின் உரிமையாளரை அழைத்து அதனை வெளியேற்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுவர். காளைகள் 15 மீட்டர் நீள ஜல்லிக்கட்டு அரங்கை தாண்டினால், காளையை பிடித்து செல்ல நீண்ட பாதை உள்ளது. அந்த பகுதியில் காளையின் உரிமையாளர் அதனை பிடித்து செல்வர். அங்கிருந்து காளைகளை அழைத்து சென்று அதற்கு உரிய தண்ணீர், உணவு, ஓய்வு வழங்கப்பட்டு வீட்டுக்கு அழைத்து செல்வர்’ என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் சாராம்சத்தை விவரித்து தமிழக அரசு இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.