இயக்குநர் பாலாவின் கைவண்னத்தில் உருவாகி வரும் ’வணங்கான்’ திரைப்படத்திலிருந்து கதாநாயகனாக நடித்து வந்த சூர்யா விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ’வணங்கான்’. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டிக்கு தங்கையாக மலையாள நடிகை மமிதா பைஜூவும் நடித்துள்ளார். 2டி எண்டெர்டைன்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வணங்கான் படத்தில் இருந்து கதாநாயகன் சூர்யா விகுவதாக இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.
எனவே ‘வணங்கான்‘ திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. ‘நந்தா’வில் நான் பார்த்த சூர்யா, ‘பிதாமகன்-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி ‘வணங்கான்’ படப்பணிகள் தொடரும்..” என்று தெரிவித்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’வணங்கான்’ திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







