உலகமே உற்று நோக்கும் சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்புவதற்கான கவுண்டவுன் எனப்படும் நேரக்கணக்கை இஸ்ரோ இன்று பகல் ஒரு மணிக்கு தொடங்கவுள்ளது. அதனையொட்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் சந்திரயான்-3-ன் சிறிய மாதிரியை ஏந்தியபடி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பிரார்த்தனை செய்தனர்.
நிலவுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளும் இந்தியாவின் லட்சியத் திட்டத்தை செயல்படுத்தவுள்ள சந்திரயான் 3 விண்கலம் நாளை பிற்பகல் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து அனுப்பப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செய்துள்ள நிலையில், அதற்கான கவுண்டவுனை இன்று பகல் 1 மணிக்கு தொடங்கவுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏற்கனவே நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் தோல்வியடைந்த நிலையில், அதில் சந்தித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சந்திரயான் 3 விண்கலம் தயாரிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். அதன்படி சந்திரயான் 3 விண்கலத்தில் அதிகளவில் எரிபொருள் நிரப்பும் வசதி இருப்பதுடன் விக்ரம் லேண்டரில் கூடுதல் சோலார் பேனல்களும் இணைக்கப்பட்டுள்ளதாக சோம்நாத் கூறியுள்ளார். சந்திரயான் 2 விண்கலத்தை அனுப்பி தோல்வியடைந்த பின்னர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மீண்டும் இந்தியா அனுப்பும் சந்திரயான் 3 விண்கலத்தை உலகமே உற்று நோக்கி வருகிறது.
இதனிடையே விண்ணில் செலுத்தப்படும் சந்திரயான் – 3 விண்கலம் வெற்றி பெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர். அப்போது சந்திரயான் -3 விண்கலத்தின் சிறிய மாதிரியை சாமி சன்னதியில் வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு செய்தனர். வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா