பாரீஸ் நகரில் நாளை நடைபெறும் பாஸ்டீல் தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் சென்றுள்ளார். பாரிஸ் நகரில் நாளை நடைபெற உள்ள பாஸ்டீல் தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொள்கிறார்.
இந்தப் பயணத்தின்போது பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிரான்ஸ் பிரதமர், பிரான்ஸ் ஆட்சிமன்றக் குழுத் தலைவர் மற்றும் பிரான்ஸ் தேசிய அவைத் தலைவர் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் இந்திய கடற்படைக்கு தேவையான 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை கொள்முதல் செய்வது, மும்பை கப்பல் தளத்தில் மேலும் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் பாதுகாப்பு, விண்வெளி, உள்கட்டமைப்பு, எரிசக்தி, விளையாட்டு, காலநிலை மாற்றம், கல்வி, பொருளாதாரம், கலாச்சாரம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் உள்ள கூட்டுறவை மேலும் பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் ஜூலை 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.







