நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என சமந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. அழகான தோற்றத்தாலும், சீரிய நடிப்பாலும் சினிமா ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். சமீப காலமாகவே சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இல்லாமல் இருந்த இவர், தான் அரிய வகை தசை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
யசோதா திரைப்பட புரொமோஷன் பணிகளுக்காக அண்மையில் நேர்காணல் ஒன்றை சமந்தா அளித்திருந்தார். அதில் பேசிய அவர், மயோசிடிஸ் நோய் எனும் தசைத் தளர்வு நோயை எதிர்த்து ஒவ்வொரு நாளும் போராடி வருகிறேன். இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில தினங்கள் நல்ல நாட்களாகவும், சில தினங்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது. மிகவும் கஷ்டமான நிலையில் தான் இருக்கிறேன், ஆனாலும் எதிர்த்துப் போராடுவேன் என்று உருக்கமாக தெரிவித்திருந்தார்.
மீண்டும் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று செய்திகள் பரவின. இந்நிலையில் இந்த தகவல் உண்மையில்லை எனவும், நடிகை சமந்தா ஹைதரபாத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் எனவும் சமந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








