’இபிஎஸ் கூறும் குற்றச்சாட்டுகள் பொய் என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்போம்’ – அமைச்சர் பெரியகருப்பன்

தமிழ்நாடு அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்போம் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட…

தமிழ்நாடு அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்போம் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு
அரசு திட்டங்கள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார். தொடர்ந்து, கடையநல்லூர் அருகே உள்ள நயினாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பெரியகருப்பன், அங்குள்ள சமுதாய நலக்கூடம் மற்றும் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ”தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் எதிர்காலங்களில் இன்னும் அதிகமான சமத்துவபுரங்களை உருவாக்குவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

4 வருடங்களுக்கு மேல் முதல்வராக பணியாற்றிய எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியாத விஷயம் ஒன்றும் இல்லை. ஆனால், போகிற போக்கில் ஏதாவது குற்றச்சாட்டுகளை பதிவிட வேண்டும் என்பதற்காகவே அவர் பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவரது குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை நாங்கள்
கண்டிப்பாக சமர்ப்பிப்போம்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.