4வது முறையாக பதவியை ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி

போலி சான்றிதழ் விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்ததால் தன்னை பணியிட மாற்றம் செய்ததாகக் கூறி,  ரவீந்திரநாத் ஐ.பி.எஸ். 4வது முறையாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப்…

போலி சான்றிதழ் விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்ததால் தன்னை பணியிட மாற்றம் செய்ததாகக் கூறி,  ரவீந்திரநாத் ஐ.பி.எஸ். 4வது முறையாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் ரவீந்திரநாத். ஆந்திராவைச் சேர்ந்த இவர் 1989ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். குழுவைச் சேர்ந்தவர் ஆவார். கர்நாடக சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குனரக டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த ரவீந்திரநாத் அண்மையில் கர்நாடக மாநில போலீஸ் பயிற்சிப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அமலாக்க இயக்குனரக புதிய டி.ஜி.பி.யாக அருண் சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டார். இந்த பணியிட மாற்றத்தால் ரவீந்திரநாத் கடும் அதிருப்திக்குள்ளாகி உள்ளார்.

இதையடுத்து, போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு திங்கள்கிழமை சென்ற ரவீந்திரநாத்,  டி.ஜி.பி. பிரவீன் சூட்டை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, என்னை பணியிட மாற்றம் செய்து சிலர் பழிவாங்கிவிட்டதாகக் கூறியதுடன், தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், கர்நாடக தலைமை செயலாளர் ரவிகுமாரிடம் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை ரவீந்திரநாத் அளித்தார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
எஸ்.சி., எஸ்.டி. (வன்கொடுமை தடுப்பு) விதிகள் 1995-இன் படி பாதுகாப்பு பிரிவு அமைக்க அரசாணை பிறப்பிக்கும்படி கர்நாடக தலைமை செயலாளர் ரவிகுமாரிடம் தான் கோரிக்கை விடுத்தேன். மேலும், போலி சான்றிதழ் விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நான் சட்டப்படி நடவடிக்கை எடுத்ததால் என்னை துன்புறுத்துவதற்காக பணியிடமாற்றம் செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
ரவீந்திரநாத் தனது பதவியை 4வது முறையாக ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டில் அப்போதைய நிர்வாக பிரிவு டி.ஜி.பி.யாக இருந்த உமாபதியின் நடவடிக்கை பிடிக்காமல் ரவீந்திரநாத் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். பின்னர் 2014ஆம் ஆண்டு பெங்களூருவில் ஒரு ஹோட்டலில் இளம்பெண்ணை செல்போனில் புகைப்படம் எடுத்தது தொடர்பான சர்ச்சையில் சிக்கிய ரவீந்திரநாத், இப்பிரச்னையில் அப்போதைய பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திர அவுராத்கர் பங்கு இருப்பதாகக் கூறி ரவீந்திரநாத் ராஜினாமா செய்திருந்தார்.
கடந்த ஆண்டு தனது ஜூனியர் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கியதாகவும், தனக்கு வழங்கவில்லை என்றும் கூறி 3-வது முறையாக ரவீந்திரநாத் ராஜினாமா செய்தார். இந்த 3 முறையும் அவர் தனது ராஜினாமாவை திரும்ப பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.