புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது, விருப்பத்தின்பேரில் ரூ. 25 கட்டணம் செலுத்தி தபால் மூலமாகப் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சா் சக்கரபாணி அறிவித்திருந்தார். இந்நிலையில், இத்திட்டத்திற்கான கட்டணம் மற்றும் வழிமுறைகள் குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரா் தபால் மூலம் பெற விரும்புகிறாரா? அல்லது நேரில் பெற விரும்புகிறாரா? என விருப்பம் தெரிவிப்பதற்கான பொது விநியோகத் திட்ட இணையதளத்தில் உரிய வசதி செய்யப்படும். தபாலில் பெறுவதற்கான கட்டணம் ரூ. 25ஐ இணையவழியில் செலுத்துமாறு, விண்ணப்பதாரருக்கு குறுந்தகவல் மூலமாகத் தெரிவிக்கப்படும்.
குடும்ப அட்டை நகலை தபாலில் பெற விரும்புவோருக்கு, இணையவழியில் விண்ணப்பிக்கும்போதே, இணையவழி அட்டை கட்டணம் ரூ. 20 மற்றும் தபால் கட்டணம் ரூ. 25 என ரூ. 45 கட்டணமாக வசூலிக்கப்படும். தபால் மூலமாக புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை பெற விரும்பாதவா்களுக்கு தற்போதைய நடைமுறைப்படி குடும்ப அட்டை தொடா்ந்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா