பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராட உலகச் சமூகம் முன்வர வேண்டுமென உலகப் பழங்குடியினர் நாளில் உளமார உறுதி ஏற்போம் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பழங்குடியினர் மானுட இனத்தின் முதல் மாந்தர் மட்டுமல்லர்; மனித இனத்தின் ஆதி மூல அடிச்சுவடுகள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தாம் பிறந்த பூமியை தாய் மடியாய் போற்றி, துளியும் சிதைக்காமல், வளக் கொள்ளை என்ற பெயரில் காயப்படுத்தாமல், இயற்கை அன்னையை அறிவியல் உளிக் கொண்டு இடறாமல் எளிய வாழ்வு வாழும் முது குடியினர்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகுத்து வாழ்ந்த தமிழர் வரலாற்றின் மூத்த ஆணி வேர் குறவர் குடிமக்கள். உலகம் முழுக்கப் பல நாடுகளில் சிறு சிறு இனக் கூட்டமாகச் சிதறி வாழ்ந்தாலும் அவர்கள்தான் மானுட தோற்றத்தின் மகத்தான தொட்டில்கள்.
காலங்காலமாய் வாழ்ந்து வந்த வனம் இழந்து, நிலமிழந்து, உரிமைகள் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் நசுக்கப்பட்டு, விளிம்பு நிலையில் நலிந்த மக்களாய் வாழும் ஒவ்வொரு பழங்குடி மூத்தோனையும் காத்து, அவர்களது உரிமைகளுக்காகப் போராட உலகச் சமூகம் முன்வர வேண்டுமென உலகப் பழங்குடியினர் நாளில் உளமார உறுதி ஏற்போம்! என்று அந்த அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.