சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 20 லட்சத்தி 89 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு பயணிகள் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது 2 பயணிகளை நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனா்.
அப்போது உள்ளாடைகளுக்குள் கட்டு கட்டாக அமெரிக்க டாலர் கரன்சி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். ரூ. 20 லட்சத்தி 89 ஆயிரம் மதிப்புள்ள கரன்சியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து 2 பேரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சென்னையில் இருந்து கரன்சிகளை கடத்தி செல்லும் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.








