துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை துருக்கி மக்கள் ஆரத்தழுவி முத்தமிடும் படங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பேர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு துருக்கியில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை துருக்கியில் ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தில் 20,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவற்றில் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில், நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் சென்ற இந்திய விமானப்படையின் 6 விமானங்கள் துருக்கி யில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன.
துருக்கி மற்றும் இந்தியா இடையிலான நட்பை உறுதி செய்யும்வண்ணம் இந்த அவசர கால நிவாரண குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதற்கு “ஆபரேசன் தோஸ்த்” என்று பெயர் வைத்துள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்த நிலையில் மத்திய ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொது தகவல் மையத்தின் கூடுதல் இயக்குநரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டிலில் இந்திய ராணுவத்தைச் சார்ந்த பெண் ராணுவ வீரரை துருக்கி மக்கள் ஆரத்தழுவி முத்தமிடும் காட்சியை பகிர்ந்து “பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளனர். மேலும் மனிதத்திற்கு சேவை செய்ய நாங்கள் முன்னணியில் இருப்போம் எனவும் அதுதான் ராணுவத்தின் பலம் என்றும் இந்திய ராணுவத்தின் ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 மில்லியன் மக்கள் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் அனைவரும் மருத்துவ மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்தது. இந்தியா நிலநடுக்கம் ஏற்பட்டவுடனே மீட்பு குழுவினர் , உணவு மற்றும் மருத்துவ குழு, படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய குழுவை அனுப்பியது.
– யாழன்







