உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 398 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்கள் எடுத்திருந்தார்.
ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் 45 லீக் ஆட்டங்கள் முடிவுற்று தற்போது நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோற்று இறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா. அதற்கு பழிதீர்க்கும் வகையில் தற்போதைய அரையிறுதியில் இந்தியா சிறப்பாக ஆடி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுவரை இந்தியா 1983, 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றுள்ளது. நியூஸி. ஒருமுறை கூட பட்டம் வெல்லவில்லை. இந்த உலகக் கோப்பையில் முதலிடத்தில் இருந்த நியூஸி. தட்டுத்தடுமாறி 4வது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் இந்தியா 9 லீக் ஆட்டங்களிலும் வென்று தகுதி பெற்றது.
மும்பையில் வாங்டே மைதானத்தில் இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதுபோக அணியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ரோஹித் தெரிவித்துள்ளார். மேலும் இரு அணியிலும் எந்த மாற்றம் இல்லை என்பதால் கடைசி போட்டியில் விளையாடிய வீரர்களே களம் இறங்க உள்ளனர்.
முதல் ஒவரிலேயே இந்திய அணி 10 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து 5வது ஓவரில் 47 ரன்கள் விளாசியது இந்தியா. பின்னர் ரோகித் சர்மா தனது விக்கெட்டினை 29 பந்தில் 47 ரன்கள் சேர்த்த நிலையில் டிம் சௌதி பந்தில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி கில் 41 பந்தில் அரைசதம் கடந்தார். 20வது ஓவர்கள் முடிவில் இந்திய அணி 150 ரன்கள் எடுத்தது.
22வது ஓவரில் சுப்மன் கில் எதிர்கொண்ட 65வது பந்தில் 79 ரன்கள் சேர்த்து விளையாடிய நிலையில் தசைப் பிடிப்பு ஏற்பட்டதால் வெளியேறினார். அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். விராட்கோலி 27வது ஓவரில் அரைசதம் விளாசினார். இதனைத்தொடர்ந்து 41வது ஓவரில் விராட்கோலி ஒருநாள் போட்டியில் 50வது சதம் விளாசி சாதனை படைத்தார். 49 சதங்கள் விளாசிய சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
அதிரடியாக விளையாடி வந்த விராட் கோலி தனது விக்கெட்டினை 113 பந்தில் 117 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடி காட்டிய ஸ்ரேயஸ் ஐயர் 67 பந்துகளில் தனது சதத்தினை எட்டினார். இது இந்த தொடரில் அவர் விளாசும் இரண்டாவது சதம் ஆகும். சிறப்பாக ஆடி 70 பந்தில் 105 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் தனது விக்கெட்டினை 49வது ஓவரில் இழந்து வெளியேறினார்.







