ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருந்த டி-20 கிரிக்கெட் தொடர் மட்டும் ஒத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் (Omicron) பல்வேறு நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை உலகில் கண்டறியப்பட்டுள்ள வைரஸ்களில் இதுதான் மிக மோசமானது என்கிறார்கள். இதனால், பல்வேறு நாடுகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. அங்கிருந்து இந்தியா வரும் விமானப் பயணிகளுக்கும் கடுமையான பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட முடிவு செய்துள்ளது. 3 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் நான்கு டி-20 போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டிருந்தது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 17 ஆம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் ’ஒமிக்ரான்’ மிரட்டுவதால் இந்த தொடர் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.
இதற்கிடையே, தென்னாப்பிரிக்காவுக்கு வீரர்களை அனுப்பும் முன் இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய அரசிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று மத்திய மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக் தாகூர் சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது என்றும் 4 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை ஒத்தி வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. டி-20 தொடர் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.