இந்தியாவில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமான 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக மக்கள் அனைவருக்கும் அதிவேகமாகக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கணக்கிட்டது. அதில் இந்தியாவின் 2 கோடிக்கும் மேலான 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில், “இளைய தலைமுறையினர் அனைவரும் சமூக அக்கறை கொண்டு தடுப்பூசி செலுத்தியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாகும்” என்று பாராட்டியுள்ளார்.
மேலும் நாட்டில் இதுவரை மொத்தம் 174.99 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூடுதல் தகவல்களைத் தெரிவித்தனர்.








