“அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரம் அல்ல” – உச்சநீதிமன்றம் கருத்து!

இந்தியா, அனைத்து இடங்களிலிருந்தும் வரும் வெளிநாட்டினரை வரவேற்று மகிழ்விக்கக்கூடிய சத்திரம் அல்ல என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இலங்கையில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக இலங்கைத் தமிழர் ஒருவர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, 2018-ல் விசாரணை நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. 2022 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் அவரது தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைத்தது. 7 ஆண்டுகள் தண்டனை முடிவடைந்ததும் அவர் இந்தியாவில் இருக்கக்கூடாது, இலங்கைக்கு நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதற்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், “இலங்கையில் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனது மனைவி மற்றும் குழந்தைகள் இந்தியாவில் குடியேறிவிட்டனர். என்னை நாடு கடத்தும் நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை என்பதால் நான் இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

தேர்தல் பத்திர விவகாரத்தில் விளையாடுகிறீர்களா?" எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம்  அதிரடி உத்தரவு! - News7 Tamil

இந்த மனு நீதிபதிகள் தீபங்கர் தத்தா, வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் கூறியதாவது,

“உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? ஏற்கெனவே நாங்கள் 140 கோடி மக்களுடன் இருந்து போராடி வாழ்ந்து வருகிறோம். இந்தியா, அனைத்து இடங்களிலிருந்தும் வரும் வெளிநாட்டினரை வரவேற்று மகிழ்விக்கக்கூடிய சத்திரம் அல்ல. இந்தியாவில் குடியேற உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டிற்குச் செல்லுங்கள்” என்று மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.