”மோடி போன்ற வலிமையான தலைவரால் இந்தியா வளர்கிறது” – ஆளுநர் ஆர்.என்.ரவி

மோடி போன்ற வலிமையான தலைவர் இருப்பதால், இந்தியா மிகப்பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 12வது பட்டமளிப்பு…

மோடி போன்ற வலிமையான தலைவர் இருப்பதால், இந்தியா மிகப்பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில்
12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் பங்கேற்றனர்.


பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “விரைவான நீதிவழங்கல் முறையை உறுதிப்படுத்துவதே பண்பட்ட, முன்னேறிய சமூகத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும். காசிக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பை ஆங்கிலேயர்கள் சிதைத்தனர். அதனை தற்போது மீட்டெக்கும் வகையில், காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலிருந்து தோன்றிய சாதுக்கள் மற்றும் முனிவர்கள், பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வை வழங்கி உள்ளனர். இந்திய நாட்டின் தோற்றத்திற்கு, கலாச்சார பெருமை வாய்ந்த தமிழ்நாடு, மிகப்பெரிய பங்களிப்பை தந்துள்ளது.

மோடி போன்ற வலிமையான தலைவர் இருப்பதால், இந்தியா மிகப்பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனை குலைப்பதற்கு மொழி, இனம், மதம், சாதி என்கிற பெயரில் தொந்தரவுகள் வரக்கூடும். அதனை நாம் கவனமுடன் எதிர்கொண்டு வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும்” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.