இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புயல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46,951- ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாட்டில் நேற்று மட்டும் 21,180 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். மேலும் 212 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர.
தமிழகத்தில் புதிதாக 1,385 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8 லட்சத்து, 68 ஆயிரத்து 367 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 888 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தவார தொடக்கத்தில் டெல்லியில் 425 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் 536, 607, 716,813 மற்றும் 823 -ஆக படிப்படியாக உயர்ந்து தற்போது 888 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்திலும் பள்ளி, கல்லூரி விடுமுறை
இந்நிலையில் மகாராஷ்டிரம், தமிழகம், கேரள, மத்திய பிரதேசம், பஞ்சம், குஜராத் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முன்பைப்போல் பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.







