உலகக்கோப்பை தொடருக்கு தலைமை தாங்குவது மிகப்பெரிய கவுரவம் என்றும், சுப்மன் கில்லுக்காக கவலைப்படுவதாகவும் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறி தெரிவித்தார்.
13-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்நிலையில் இந்திய அணி சார்பாக சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“உலகக்கோப்பை தொடருக்கு சிறப்பாக தயாராகியுள்ளோம். வீரர்கள் நல்ல முறையில் பயிற்சி எடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா உடனான போட்டியை எதிர்நோக்கி உள்ளோம். வீரர்கள் முழு உடற்தகுதியுடன் உள்ளனர். சுப்மன் கில்லுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விரைவில் அவர் குணம் அடைய விரும்புகிறோம்.
உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றதையும் கேப்டனாக இருப்பதையும் மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். உலகக்கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்பது எனது கனவு. வார்த்தைகளால் அதனை விவரிக்க முடியாது. அன்றைய தினத்தில் சிறப்பாக ஆட வேண்டும். ஆஸ்திரேலிய வீரர்கள் ஐசிசி தொடர்களில் எப்படி விளையாடுவார்கள் என அனைவருக்கும் தெரியும். எங்களுடைய பலத்தில் கவனம் செலுத்துவோம்.
சென்னை மைதானம் சற்று சவால் மிகுந்தது. கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவிடம் இங்கு விளையாடியபோது தோல்வி அடைந்தோம். அதற்கான காரணங்களை கண்டறிந்துள்ளோம். இந்த முறை சிறப்பாக விளையாடுவோம். மைதானம் எப்படி செயல்படும் என்பதை நிர்ணயிக்க முடியாது. இதுபோன்ற மைதானங்களில் நல்ல லென்தில் பவுலிங் செய்ய வேண்டும். மைதானத்தின் தன்மை மாறக்கூடியது. அதற்கேற்ப விளையாடுவோம்.அனுபவம் மிக்க வீரர்கள் அணியில் உள்ளனர். அவர்களுக்கு எப்படி விளையாட வேண்டும் என தெரியும். அணியில் முழுச் சுதந்திரம் அளிப்போம். எப்போதும் நம்மைச் சுற்றி அழுத்தம் இருக்கும். அதனை அணுகும் விதம் தான் முக்கியமானது. அழுத்தத்தை கடந்து சென்று சிறப்பாக செயல்பட வேண்டும். வலுவான மனநிலையை கொண்டிருக்க வேண்டும். அணிக்கு என்ன தேவையோ அதை செயல்படுத்த வேண்டும். உலகக்கோப்பை தொடர் என்பதால் அழுத்தம் அடையக்கூடாது.
அனைத்து அணியினரும் பல்வேறு விதமான மைதானங்களில் ஆடியுள்ளனர். ஆஸ்திரேலியா அதிகமாக சென்னை மைதானத்தில் ஆடியிருப்பது ஒருவகையில் அவர்களுக்கு பலன் அளிக்கும். கில்லுக்காக கவலைப்படுகிறேன். ஒரு மனிதனாகத்தான் முதலில் நான் யோசிப்பேன். கில் விரைவில் குணமடைய விரும்புகிறேன். நாளை கில் விளையாடியே ஆக வேண்டும் என நான் நினைக்கவில்லை. உடல்நலக்குறைவுடன் இருப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். விரைவில் கில் குணம் அடைவார்.
3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்த மைதானத்தில் களமிறங்குவது நல்ல தேர்வாக இருக்கும். அதனை மைதானத்தின் தன்மையை பொறுத்து முடிவு செய்வோம். உலகக்கோப்பையை வெல்வது சிறப்பாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 8 முதல் 10 வீரர்கள் ஒரே வீரர்களாகத்தான் இருப்பார்கள். ஒன்றிரண்டு வீரர்கள் மாறலாம். ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு சல்யூட்” எனத் தெரிவித்தார்.