நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிக்கும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தயாராகும் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’ஜிகர்தண்டா’. சித்தார்த் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில், லட்சுமி மேனன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ’அசால்ட் சேது’ என்ற பெயரில், ஜிகர்ண்டா படத்தில் தோன்றிய பாபி சிம்ஹாவை ரசிகர்கள் கொண்டாடினர். அந்த கதாபாத்திரத்திற்காக 2014-ம் ஆண்டு தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.
சந்தோஷ் நாராயணனின் மிரட்டல் இசையில் உருவான இப்படத்தின் பிஜிஎம், இன்றும் பலரது ரிங்டோனில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு அங்கமாக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின், இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அண்மையில் வெளியிட்டார். அதன்படி ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா மோதிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ள காட்சிகள், ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ’ஜிகர்தண்டா டபுஸ் எக்ஸ்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
Almost time to dance to the first single from #JigarthandaDoubleX 🕺#Maamadura releasing on 9th October, at 12.12 PM.
A @Music_Santhosh blast 🔥#APandyaaWestern story, in theatres Diwali 2023.@offl_Lawrence @iam_SJSuryah @dop_tirru @kaarthekeyens @stonebenchers… pic.twitter.com/DlU7MFzMcE
— karthik subbaraj (@karthiksubbaraj) October 7, 2023
இதனைத் தொடர்ந்து, ஜிகர்தண்டா டபுள் எக்ஸின் முதல் பாடலான ‘மாமதுர’ பாடல் அக்.9-ம் தேதி மதியம் 12.12 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. இந்த பதிவினை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சந்தோஷ் நாராயணின் பாடல்களுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதாக கமெண்ட்டுகளில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.







