தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுற்றுலாத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்து துறை மற்றும் சுற்றுலாத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது சுற்றுலாத்துறைக்கான கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டது.
அதில்,ஒவ்வொரு வருடமும் அதிகளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டிற்கு வருகை புரிவதாகவும், தமிழ்நாட்டிற்கான சுற்றுலா பயணிகள் வருகையில் அமெரிக்க, ஐக்கிய நாடுகள், பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, சீனா, மலேசியா, ஜெர்மனி, ரஷ்யா, இலங்கை, மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் பெரும் பங்கு வகிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2019-ம் ஆண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடத்தையும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2-வது இடத்தையும் பெற்றது. 2020-ம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோதிலும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடத்தையும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் 2-ம் இடத்தையும் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 2021-ம் ஆண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுற்றுலாத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








