தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையினால் சுமார் 8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயம் மிகுந்த பகுதியாகும். இந்த
பகுதியில் நெல், வாழை, திராட்சை, பீட்ரூட், கரும்பு போன்றவை அதிக அளவில் விளைகின்றன. குறிப்பாக கருநாக்கமுத்தம்பட்டி, சுருளிப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, அணைப்பட்டி ஆகிய பகுதிகளில் வாழை விவசாயம் மிக முக்கியமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப் பகுதியில் சுமார் 3000 ஏக்கருக்கு மேல்
வாழை விளைவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையினால் கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தம்பட்டி ஊராட்சியில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 8,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்துள்ளன. சேதமடைந்த வாழைகள் அனைத்தும் தார்கள் வெட்டும் நிலையில் உள்ள ரூபாய் பத்து லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள வாழை மரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழை சேதம் அடைந்த இடத்திற்கு கர்நாக்கமுத்தன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் கிராம நிர்வாகி அதிகாரி ஆகியோர் வருகை தந்து சேதம் அடைந்த வாழை மரங்கள் அனைத்தையும் பார்வையிட்டு சென்றனர். வெட்டும் நிலையில் உள்ள வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
—ரெ.வீரம்மாதேவி
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்