தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. தொடர்ந்து கடந்த மாதம் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் மொத்தம் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவை தொடர்பாக விண்ணப்பிக்க ஜனவரி 18-ம் தேதி வரை தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்திருந்தது. இதற்காக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் அளித்திருந்த கால அவகாசம் நேற்றுடன் நிறைவடையும் நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவை தொடர்பாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுள்ளது.
இது தொடர்பாக தமிழ் நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”தமிழ்நாடு மாநிலத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தத்தின் பொருட்டு, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தாக்கல் செய்யும் காலத்தை 30.01.2026 வரை நீட்டிக்க முடிவு செய்யப்படுள்ளது. பொதுமக்கள் அனைவரும், இந்த நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியல் தொடர்பான ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகளை உரிய முறையில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







