இந்தியா என்றாலே நினைவுக்கு வருவது ஊழலும், மோசமான சாலைகளும் தான் என்றும் அதனை மாற்ற வேண்டும் என்றும் இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் ராஜம் என்ற இடத்தில் ஜிஎம்ஆர் தொழில்நுட்ப கல்வி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வாய்ப்பு தேடுபவர்கள் எங்கே இடைவெளி, தேவை இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றார். நீங்களே உங்களை தலைவராக நினைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிய நாராயணமூர்த்தி, வேறு ஒருவர் தலைவர் பதவியை எடுத்துக் கொள்வதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று கூறினார். நீங்கள் என்ன உருவாக்குகிறீர்களோ அது தான் நிஜம் என்றும் நாராயணமூர்த்தி குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய அவர், இந்தியா என்றாலே நம் நினைவுக்கு வருவது ஊழல், மோசமான சாலைகள், மோசமான சுற்றுச் சூழல் மற்றும் மின்சார இல்லாதது தான். அதே நேரத்தில் சிங்கப்பூர் என்றால் சுத்தமான சாலை, நல்ல சுற்றுச்சூழல், தடையற்ற மின்சாரம் தான். ஆகவே உங்களுடைய பொறுப்பு அத்தகைய நல்ல நிலையை உருவாக்குவதாகத் தான் இருக்க வேண்டும் என்று கூறினார். இளம் தலைமுறையினர், சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முனைய வேண்டும். சுய நலத்தை விட, நாட்டு மக்கள், சமுதாயம் மற்றும் தேசத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று நாராயணமூர்த்தி கூறினார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் தம் மனதில் இருக்கும் கவலையை அவர் பகிர்ந்து கொண்டார். இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களின் குழந்தைகள் யாரும் தற்போது அதன் நிர்வாக பொறுப்பில் இல்லாதது வேதனை அளிப்பதாகக் கூறினார்.
40 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் உருவாக்கப்பட்ட இன்போசிஸ் நிறுவனம் ஐடி துறையில் முதன்மையான நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. என்.ஆர். நாராயணமூர்த்தி, நந்தன் நிலேகனி, எஸ். கோபாலகிருஷ்ணன், உள்ளிட்டோர் தலைமையில் இன்போசிஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது.