“பாஜக வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்” என அக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக ஆகியவை கூட்டணியை இறுதி செய்து வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாஜக கூட்டணியில் இதுவரை தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் ஜான் பாண்டியன் உள்ளிட்டவர்களின் கட்சிகளும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளன. அவர்களுடன் தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகளையும் இணைக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இன்னொருபுறம் பாஜகவின் தேசிய தலைமையோ அதிமுகவைவும் மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்று அனைத்து விதமான முயற்சிகளையும் செய்து வருவதாக பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் இன்று டெல்லி சென்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தயாரித்துள்ள உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் இன்று டெல்லி தலைமையிடம் ஒப்படைக்க டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் அவர்கள் தெரிவித்தனர்.
அப்போது பேசிய அண்ணாமலை, பாஜக மாநில தேர்தல் குழு இன்று டெல்லி செல்கிறது. பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் டெல்லிக்கு செல்கிறோம். பாஜக தொண்டர்கள், பொதுமக்களின் கருத்துகளை பாஜக தலைமையிடம் கொண்டு செல்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் பாஜக தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் அதிகபட்சமாக 63 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
39 தொகுதிகளில் பெறப்பட்டுள்ள விருப்ப மனு பட்டியலை தேசிய தலைமையிடம் ஒப்படைப்போம். 39 தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களுக்கு அதிக முன்னுரிமை தந்துள்ளோம். உத்தேச பட்டியலில் உள்ளவர்கள் பெயரை தெரிவிக்க விரும்பவில்லை. சில தொகுதிகளில் பாஜக மட்டுமே நிற்க வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பதை தேசிய தலைமையிடம் கூறுவோம். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு மற்றும் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி பற்றி தேசிய தலைமை முடிவெடுக்கும் என அவர் கூறினார்.