இளையராஜா குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்மையில் வெளியான “அம்பேத்கர்- மோடி” புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருக்கிறார். அந்த புத்தகத்தில் அம்பேத்கரின் திட்டங்களை மோடி நடைமுறைப்படுத்தி வருகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தகத்தை படிக்காமல் சிலர் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசியிருப்பதாக இளையராஜாவை இழிவாக பேசி வருவது கண்டனத்துக்குரியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இளையராஜா தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அண்மையில் பேசிய சர்ச்சை பேச்சு தொடர்பாக ஏர்போர்ட் மூர்த்தி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், பட்டியலின சமூகம் குறித்து இழிவாகப் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி மற்றும் மேடையில் அமர்ந்திருந்தவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், இந்த உத்தரவு கடிதம் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நேரிலோ அல்லது அஞ்சல் வாயிலாகவோ அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இருவரும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.