“கோவை சிறையில் நான் கொல்லப்படலாம்” – கையில் மாவுக்கட்டுடன் கூச்சலிட்ட சவுக்கு சங்கர்!

எனது கையை உடைத்தது கோவை சிறைச்சாலை கண்காணிப்பாளர் எனவும், கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் எனவும் சவுக்கு சங்கர் கூறினார். பெண் காவல் துறையினரையும்,  காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசிய  டி யூபர்…

எனது கையை உடைத்தது கோவை சிறைச்சாலை கண்காணிப்பாளர் எனவும், கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் எனவும் சவுக்கு சங்கர் கூறினார்.

பெண் காவல் துறையினரையும்,  காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசிய  டி யூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  கோவை மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு,  கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்ட காவல் துறையினர் கஞ்சா வழக்கு பதிவு செய்த நிலையில்,  கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை தேனி காவல் துறையினர் கைது செய்தனர்.  இதேபோல திருச்சி, சென்னை காவல் துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்தனர்.  இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் பதிவாகியுள்ள நிலையில்,  அடுத்தடுத்து அந்த வழக்குகளிலும் அவரை கைது செய்ய காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே கடந்த 6-ம் தேதி மத்திய சிறையில் காவலர்கள் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.  மனுவை விசாரித்த கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றம் சவுக்கு சங்கிற்கான சிகிச்சையை வழங்க உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே மற்றும் பரிசோதனைகள் மேற்கொண்டதில் வலது கையில் இரண்டு இடங்கள்ள லேசான எலும்புமுறிவு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.  இதற்காக மாவு கட்டு போட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பலத்த பாதுகாப்புடன் இன்று மீண்டும் அழைத்து வரப்பட்டார்.  மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் மருத்துவர்கள் மாவு கட்டு போட பரிந்துரை செய்தனர்.  இதையடுத்து சவுக்கு சங்கருக்கு மாவு கட்டு போடப்பட்டது.

அங்கிருந்து வெளியே அழைத்து வரும் போது,  கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் தன் கையை உடைத்ததாகவும்,  கோவை மத்திய சிறை தான் உனக்கு சமாதி என மிரட்டுவதாகவும் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு வைத்தார்.  பின்னர் காவல் துறையினர் சவுக்கு சங்கரை பாதுகாப்பாக மீண்டும் சிறைக்கு அழைத்து சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.