மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10ஆம் வகுப்புக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி அன்று தொடங்கின. மார்ச் 13ஆம் தேதி தேர்வுகள் முடிவடைந்தன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வினை மொத்தம் 39 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இன்று காலை வெளியானது. இதில் 87.98% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தற்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளன. மொத்தம் 22 லட்சத்து 38 ஆயிரத்து 827 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 20 லட்சத்தி 95 ஆயிரத்து 467 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.48% பேர் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.75 சதவீதமும், மாணவர்கள் 92.71 சதவீதமும், மாற்று பாலினத்தவர் 91.30 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 2.04% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.75 % பெற்று திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தை பெற்றுள்ளது. 99.60% பெற்று விஜயவாடா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. 99.30 % பெற்று சென்னை மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.






