ஒரு பாடல் என்பது அப்போதுதான் பூத்த மலர் மாதிரி இருக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முந்தானை முடிச்சு படம் வெளியாகி இப்போது 38 வருடம் ஆகிறது. இரு தினங்களுக்கு முன்பு 16 வயதினிலே படம் வெளியாகி 40 வருடம் ஆகிவிட்டது என்றனர். ஒரே பாடலை திருப்பி திருப்பி எத்தனை வருடமாக கேட்கிறார்கள். 20 வருடத்துக்கு முன்பு போட்ட பாடல்களை இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு பாடல் என்பது அப்போதுதான் பூத்த மலர் மாதிரி இருக்க வேண்டும். பூத்த மலர் என்ன ஆகும் என்றால் ஓரிரு நாளில் சருகாகி உதிர்ந்து போய்விடும். ஆனால் பாடல் மலராகவே இருக்கும்.
இசையில் மொட்டில் இருந்து லேசாக விரியும் நிலையில் இருப்பதைத்தான் நீங்கள் ரசித்து கேட்க முடியும். இல்லையென்றால் பிரயோஜனம் இல்லை. எப்போது கேட்டாலும் அடடா புதிதாக இருக்கிறதே. இப்போதுதான் போட்டமாதிரி இருக்கிறதே என்று சொல்ல வேண்டும். புதிதாக இல்லையென்றால் பிரயோஜனம் இல்லை. மனது எப்போதும் புதிதை நோக்கித்தான் போகும். பழையதை திரும்பி பாக்காது. ஆனால் பழைய பாடல்களை மீண்டும் கேட்க காரணம் அது புதிதாக இருப்பதால்தான். மீண்டும் இசையமைக்கத்தான் புதிய ஸ்டுடியோ கட்டி இருக்கிறேன். இசைக்கலைஞர்கள் வருகிறார்கள். வாசிக்கிறார்கள். அதுபாட்டுக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது.
தஞ்சையில் இசைப் பல்கலைக் கழகம் தொடங்க ஏற்கனவே கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தேன். வெளிநாடுகளில் இசைக் கலைஞர்கள் வீட்டை பழைய தோற்றம் மாறாமல் புதுப்பித்து பாதுகாக்கிறார்கள். இசைக் கருவிகளை வைத்து பாதுகாக்கிறார்கள். இங்கு நமது இசைக் கருவிகளை பாதுகாத்து வைத்துள்ளோமா? தியாகராஜ சாமி வைத்துள்ள தம்புராவை எங்கு வைத்துள்ளீர்கள்? முத்துசாமி தீட்சிதர் வாசித்த வீணை இருக்கிறதா? நமக்கு அதன் மதிப்பும் மகத்துவமும் தெரியவில்லை என்று கருணாநிதி முன்னால் பேசினேன்.
இசை பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். அந்த கோரிக்கைக்கான அரசு உத்தரவும் வந்தது. அது அப்படியே நிற்கிறது. இசைக் கலைஞர்களுக்கு இங்கு சிலை இல்லை. நமது உணர்வுகள் அப்படி இருக்கிறது. ஏன் சினிமாவில் நடிக்கவில்லை? என்றெல்லாம் நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள். நான் கேமராவில் முகத்தை காட்ட கூடாது என்று இருக்கிறேன். நாங்கள் பின்னணி இசைக் கலைஞர்கள். நீங்கள் என்னை நினைத்துக்கொண்டு இருக்க வேண்டும். நானே என்னை பாருங்கள் என்று முகத்தை காட்டக்கூடாது. இசை கேட்கும்போது நான் ஞாபகத்துக்கு வந்தால் போதும்.
இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.