நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு, நினைவிடம் அமைக்கப்பட்டது. இதனிடையே விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக தேமுதிக கடைபிடித்து வருகிறது. இதில் பங்கேற்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் காலை முதலே தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
அதைபோல பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர், துணை பொது செயலாளர், பொருளாளர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். இதன் காரணமாக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நினைவிடத்திற்கு வரும் பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.







