சென்னையில் ரவுடிகளை கணக்கெடுத்து அவர்களின் நடவடிக்கைகள் ஒடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள தரைதளத்தில் நிர்பயா பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “3 ஆலோசனை மையத்தை துவக்கி வைத்துள்ளோம். பெண்கள், குழந்தைகளுக்காக 3 மையங்கள் துவக்கி வைத்துள்ளோம். இதற்காக ஒரு கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்காக ரூ.55 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனை, சட்ட உதவி உள்ளிட்ட உதவிகள் இந்த ஆலோசனை மையத்தில் அளிக்கப்படும். பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்படும். பாதிக்கப்பட்ட நபரது விவரங்களை பெற்று உதவி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என் கூறியுள்ளார்.
மேலும், “34 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெண் வன்கொடுமை, வரதட்சணை, குழந்தை திருமணம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க இது வழிசெய்யும்.” என்று கூறிய அவர், “சென்னையில் ரவுடிகளை கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் குட்கா பொருட்களை தடுக்க அது வரும் வழி தடங்களை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை எடுக்க உள்ளோம், அதேபோல் குட்கா தயாரிக்கப்படும் குடோன்கள் ஆய்வு செய்து தடுக்க உள்ளோம்” என்று கூறியுள்ளார். மேலும், குட்கா கடத்தி வருபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.








