சிதம்பரம் கோயிலில் வழிபட வந்த நந்தனாரை, நடராஜர் உள்ளே அனுமதித்திருந்தால் இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் வந்திருக்காது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆவணக் காப்பகம் – வரலாற்று ஆராய்ச்சித் துறை மற்றும் டாக்டர் பழனி G.பெரியசாமி அறக்கட்டளை சார்பில், “பின் நகரும் காலம் – தமிழக தொல்லியல் ஆய்வுகளை முன் வைத்து” என்ற தலைப்பில் சொற்பொழிவு கூட்டம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, வரலாறு என்பது வரலாறாகவே இருக்க வேண்டும். உண்மையான வரலாற்றை கொண்டு வரவேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம் என கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அகழ்வாராய்ச்சி பணிக்காக 5 கோடியை முதலமைச்சர் அறிவித்து இருக்கிறார். ஆவண காப்பகம் வளர்ச்சிக்காக 2022 இல் கையேடு ஒன்றை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். ஆரிய நாகரிகத்திற்கு முன்பாகவே இந்தியாவின் தெற்கு பகுதியில் திராவிட நாகரிகம் இருந்தது என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அலெக்சாண்டர் படையெடுத்து வரும்போது தான் ஆரிய திராவிடம் இங்கே வந்தது. அதற்கு முன்பே இங்கே திராவிட நாகரீகம் இருந்தது என்றார்.
மனித உணர்வை உருவாக்க வேண்டும், சமத்துவம் இருக்க வேண்டும், நீதி வழங்கப்பட வேண்டும் என்பது தான் திராவிட மாடல் என தெரிவித்தார். ஒரு காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு உள்ளே பெண்களை அனுமதிக்க மாட்டார்கள். போனாலும் வெளியில் நிறுத்திவிடுவார்கள். கோயில் மூலஸ்தானத்தில் சுவாமி இருக்கும் போது நந்தி நடுவில் இருக்கும். எல்லா கோயில்களிலும் சுவாமிக்கு எதிரே நந்தி சிலை இருக்கும். ஆனால் சிதம்பரம் கோயிலில் மட்டும் தான் நந்தி விலகி இருக்கும். நந்தனார் வழிபட நடராஜர், நந்தியை விலகி இருக்க சொன்னதாக கூறுவார்கள்.
நந்தியை விலகியிருக்க சொன்ன நடராஜர், நந்தநாரை உள்ளே அழைத்திருந்தால் இன்றைக்கு அனைத்து சாதியினர் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் தேவையில்லாமல் போயிருக்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இதை எல்லாம் மாற்றி அமைத்து தான் முதலமைச்சர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அறிவித்தார் என விளக்கமளித்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஆவண காப்பகம் தமிழ்நாட்டிற்கு அமைந்து இருப்பது தமிழகத்திற்கு சிறப்பு. ஆவண காப்பத்தில் இருந்து தான் முதலில் அகழ்வாராய்ச்சி தொடங்க வேண்டும். இதை அனைத்தையும் டிஜிட்டல் ஆக்க இந்த துறை செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து அகழ்வாராய்ச்சியும் அறிவியல் ரீதியாக ஏற்று கொள்ளும் படி செய்து வருகிறோம் என தெரிவித்தார்.