2026-27 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டிற்கான தமிழ் நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் குறித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்படி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மூன்று மாத மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டதும் கோடைக்கால சிறப்பு தொகையாக 2000 வழங்கப்பட்டதும் தேர்தலுக்காகவே என்று விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், இனி ஆண்டுதோறும் கோடைக்காலத்தை முன்னிட்டு சிறப்பு தொகையாக ரூ 2000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.
2021 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு திமுக அரசு மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. தேர்தலில் வெற்றிப் பெற்றும் 2024 மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் இருந்து தான் இத்தொகை வழங்கப்பட்டது. இது எதிர்கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனத்திற்குள்ளானது.
இந்த சூழலில் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் கடந்த 13 ஆம் தேதி காலையில் 5000 ரூபாய் பணத்தை வரவு வைத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. தேர்தலால் இத்திட்டம் நின்று விடக்கூடாது என்பதற்காக மூன்று மாத தொகையான ரூ 3000-ம் கோடைக்கால சிறப்பு தொகையாக ரூ 2000 – ம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







