நான் நடிகராக ஏற்றுக் கொண்டது சிவாஜி கணேசன், கமல்ஹாசன் மட்டுமே என்னைக் கூட அந்த வரிசையில் வைக்கவில்லை என நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
சிறந்த ஓவியரும் நடிகருமான சிவகுமார், ”திருக்குறள் 100” என்ற தலைப்பில் வள்ளுவர் வழியில்வந்தவர்கள் வரலாற்றுடன் குறள் என்ற வீடியோ தொகுப்பை உருவாக்கியுள்ளார். அதில் தன்னுடைய வாழ்விலும், நாட்டிலும் நடந்த சம்பவங்களை திருக்குறளுடன் ஒப்பிட்டு
அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பேசியதாவது..
“சினிமா பார்க்கும் மக்களுக்கு இது போன்ற திருக்குறள் விளக்கம் புது அனுபவமாக
இருந்திருக்கும். இந்த திருக்குறள் விளக்கம் போன்று இதுவரை உலகத்தில் யாரும் செய்ததில்லை என்று சொல்கிறார்கள்.
எனக்கு 64 வயதாகிறது. இந்த வயதில் இனிமேல் மேக்கப் போட்டு நடிக்க கூடாது என்று முடிவு செய்துள்ளேன். சினிமாவில் நடித்த நிறைவை விட நான் வரைந்த ஓவியங்களும், என் பேச்சுக்கள் மட்டுமே நிறைவை தரும், மற்றும் என்றும் நிலைத்து நிற்கும்.

தமிழ் திரையுலகில் நான் நடிகராக ஏற்றுக் கொண்டது சிவாஜி கணேசன், கமல்ஹாசன் மட்டுமே என்னைக் கூட அந்த வரிசையில் நான் வைக்கவில்லை.
அதேபோல சிலப்பதிகாரத்தில் எனக்கு சில கேள்விகள் உண்டு, கோவலனுக்காக மதுரையை எரிப்பதற்கு கோவலன் என்ன உத்தமனா?, மன்னன் செய்த தவறுக்கு மதுரை என்ன செய்யும் அதனால் என் குழப்பம் தீரும் வரை சிலப்பதிகாரத்தை பற்றி நான் பேசப்போவதில்லை.

திருக்குறளில் திருவள்ளுவர் மடித்தலும் நீட்டலும் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். அவர் தாடியை கையினாலா புடுங்கியிருப்பார். முதலில் அவருக்கு உருவமே இல்லை. ஆனாலும் அவரை வள்ளுவராக ஏற்றுக் கொண்டோம் அவ்வளவுதான்.” என்று அவர் தெரிவித்தார்.







