தேவை ஏற்பட்டால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், எழும்பூர், துறைமுகம் பகுதிகளுக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகளின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஓ.பன்னீர்செல்வத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட கழகச் செயலாளர், பகுதி கழகச் செயலாளர், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மாவட்ட மகளிர் அணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் வடசென்னை மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது வடசென்னை தெற்கு, மேற்கு மாவட்ட அமமுக இளைஞரணி செயலாளர் வில்லியம்ஸ் அலெக்சாண்டர், தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவரது அணியில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆளுநரை சந்தித்தது குறித்த கேள்விக்கு, தேவை இருக்கும் எனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திப்பேன் என்று பதிலளித்தார். மேலும் பொதுக்குழு கூட்டுவதற்கான தேதி குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அது குறித்து விரைவில் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.







