கல்வியில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை, நான் மத்திய கல்வி அமைச்சரானால் ஒழிப்பேன் என வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லூரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் வாத்தி. தமிழில் வாத்தி எனவும் தெலுங்கில் சார் எனவும் இப்படம் வெளியாகி உள்ளது.
இதையும் படிக்கவும்: நம்ம மதுரைக்கும் வரப் போகுது மெட்ரோ ரயில் சேவை!
வாத்தி படத்தின் இயக்குநரான வெங்கி அட்லூரி பட ப்ரொமோஷனுக்காக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கல்வியில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினார். இந்த கருத்து பலரின் கோபத்தையும் தூண்டியுள்ளது என்றே கூறவேண்டும்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் கற்பனை கேள்வியாக, நீங்கள் மத்திய கல்வி அமைச்சரானால் எடுக்கும் முக்கிய முடிவு என்ன என்று அவரிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த இயக்குநர் வெங்கி, “நான் இட ஒதுக்கீட்டை நீக்குவேன். இடஒதுக்கீடு என்பது ஜாதியின் அடிப்படையில் அல்ல, நிதி நிலையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று கூறினார்.
வாத்தி திரைப்பட இயக்குநரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் சமூகவலைதளங்களில் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கல்வி முறையை பற்றி திரைப்படம் எடுப்பதற்கு பதிலாக, முதலில் நீங்கள் உங்களை பற்றி படியுங்கள், அம்பேத்கரை பற்றி படியுங்கள் என்று பலரும் காட்டமான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.







