‘ஜெயலலிதாவின் அண்ணன் நான்! சொத்தில் எனக்கும் பங்கு உண்டு’ – நீதிமன்றத்தில் 83 வயது முதியவர் மனு

ஜெயலலிதா சொத்துக்களில் தமக்கும் பங்கு வேண்டும் என கேட்டு, ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி வாசுதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு தீபக் மற்றும் தீபாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம்…

ஜெயலலிதா சொத்துக்களில் தமக்கும் பங்கு வேண்டும் என கேட்டு, ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி வாசுதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு தீபக் மற்றும் தீபாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த 83 வயதான வாசுதேவன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சகோதரர் தாம் தான் என்றும், ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவியினுடைய மகன் என்றும் தெரிவித்துள்ளார்.

தமது தந்தை ஜெயராமன் இரண்டாவது மனைவியாகத்தான் வேதவள்ளி என்கிற வேதம்மாவை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் தான் ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா என்றும் தெரிவித்துள்ள அவர், ஜெயக்குமாரின் வாரிசுகள்தான் தீபா மற்றும் தீபக் என்று தெரிவித்துள்ளார்.

இந்து வாரிசுரிமைச் சட்டப்படி தமக்கும் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு உள்ளது என்றும் வாசுதேவன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனுவை பட்டியலிடுவது தொடர்பாக தீபா, தீபக் ஆகியோர் பதிலளிக்கும்படி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.