சார்ஜாவிலிருந்து கோவை வந்த விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் வந்த பங்களாதேஷை சேர்ந்த வாலிபர் தான் இந்தியன் எனக் கூறியதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தேசிய கீதம் பாடச் சொன்னதால் சிக்கினார்.
கோவை விமான நிலையத்திற்கு சார்ஜாவிலிருந்து வாரத்துக்கு ஐந்து முறை விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து வந்த பயணிகளை கோவை விமான நிலையத்தில் குடியேற்ற பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் சந்தேகத்துக்கிடமான வந்த வாலிபரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அந்த
வாலிபரின் ஆவணங்களை சரிபார்த்தனர். அதில் அந்த வாலிபர் போலி பாஸ்போர்ட்டில்
சார்ஜாவில் இருந்து இந்தியா வந்தது தெரிய வந்தது. மேலும் அந்த வாலிபரிடம்
நடத்திய விசாரணையில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த அன்வர் உசேன் என்பதும்,
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் டெய்லராக வேலை செய்து வந்த அன்வர் உசேன்,
சார்ஜாவுக்கு வேலைக்கு சென்றதும் தெரியவந்தது.
மேலும் சார்ஜாவில் குறைவான சம்பளம் கிடைத்ததன் காரணமாக மீண்டும் இந்தியா வரத் திட்டமிட்டு போலி ஆவணங்கள் கொடுத்து தான் இந்தியன் என பாஸ்போர்ட் பெற்றதும் தெரிய வந்தது. தான் இந்தியன் என கூறியதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தேசிய கீதம் பாடச் சொல்லி கேட்டுள்ளனர்.
ஆனால் தேசிய கீதம் பாடாமல் திகைத்த அன்வர் உசேனை கைது செய்த அதிகாரிகள் பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசார் அன்வர் உசேன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.