ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் நடிகையும் அரசியல்வாதியுமான ஊர்மிளா மடோன்த்கர் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ’இந்திய ஒற்றுமை நடைபயணம்’ மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் காஷ்மீரில் சென்று முடிவடைய உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டில் தொடங்கிய பயணம் கேரளா, கர்நாடாகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று ஜம்முவில் நக்ரோதா நகரத்தில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டார். அப்போது நடிகையும் அரசியல்வாதியுமான ஊர்மிளா மடோன்த்கர் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் நடைபயணத்தை மேற்கொண்டார்.
ஊர்மிளா மடோன்த்கர் கடந்த 2019-ம் ஆண்டில் காங்கிரஸில் இருந்து விலகி 2020ம் ஆண்டில் சிவ சேனா கட்சியில் இணைந்தவர். தற்போது ராகுல் காந்தியின் நடைபயணத்தில் அவர் கலந்து கொண்டது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் எழுத்தாளர் பெருமாள் முருகன், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் விகர் ரசூல் வானி ஆகியோரும் இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.
ஏற்கெனவே மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், கனிமொழி எம்பி ஆகியோர் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.