ஓசூர் வன்முறை சம்பவம்: தமிழக காவல்துறை ஏடிஜிபி சங்கர் அதிரடி உத்தரவு

ஓசூர் எருது விடும் விழா அனுமதி மறுப்பு சம்பவத்தை தொடர்ந்து ஜல்லிக்கட்டு, எருது விடும் விழாவிற்கு எஸ்.பி, டிஐஜி ஆகியோர் ஆலோசனை நடத்தி அனுமதி வழங்குவதா?மறுப்பதா? என்பதை முடிவு செய்யவேண்டும் என சட்டம் ஒழுங்கு…

ஓசூர் எருது விடும் விழா அனுமதி மறுப்பு சம்பவத்தை தொடர்ந்து ஜல்லிக்கட்டு, எருது விடும் விழாவிற்கு எஸ்.பி, டிஐஜி ஆகியோர் ஆலோசனை நடத்தி அனுமதி வழங்குவதா?மறுப்பதா? என்பதை முடிவு செய்யவேண்டும் என சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கோபசந்திரம் என்னுமிடத்தில் இன்று எருதுவிடும் விழா நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டதால் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்து வரப்பட்டன.

இதையடுத்து முறையாக அனுமதி வழங்கப்படவில்லை என காவல்துறை தரப்பில், எருதுவிடும் விழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடைசெய்து, சாலைகளில் மண் மற்றும் கற்களை குவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இளைஞர்கள் போக்குவரத்தை தடைசெய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பாதிப்படைந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் கோபசந்திரம் பகுதியில் எருது விடும் விழாவிற்கு அனுமதியளித்தது.

இருந்தும் எருது விடும் விழாவுக்கு அனுமதி அளித்து விழா நடைபெற ஆரம்பித்த நிலையிலும், கோபசந்திரம் பகுதியில் போராட்டகாரர்கள் விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கிருஷ்ணகிரி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகங்கள் அணிவகுத்து நின்றதோடு, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்கும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கினர்.

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதோடு, கோபசந்திரம் பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. பிறகு ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரை  பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். காவல்துறையினரின் இந்த 2 மணி நேர முயற்சிக்கு பிறகு போக்குவரத்துக்கு சரிசெய்யப்பட்டு அனைவரும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜல்லிக்கட்டு, எருது விடும் விழாவிற்கு எஸ்.பி, டிஐஜி ஆகியோர் ஆலோசனை நடத்தி அனுமதி வழங்குவதா?மறுப்பதா? என்பதை முடிவு செய்யவேண்டும். இதையும் மீறி பிரச்சினை ஏற்பட்டால் எஸ்.பி., டிஐஜி ஆகியோர் தான் பொறுப்பேற்க வேண்டும் என சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் டிஐஜி-க்களுக்கு செல்போன் மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதிவரை தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு, எருது விடும் விழாக்கள் மற்றும் ரேக்ளா பந்தயம் உள்ளிட்டவைகள் நடத்தப்பட உள்ளது. இதற்காக காவல்துறை அனுமதி வழங்கும் முன்பாக மாவட்ட எஸ்.பி.க்கள், சரக டிஐஜிக்கள் இருவரும் கலந்து ஆலோசனை நடத்திய பிறகே அனுமதி வழங்குவதா? அனுமதி மறுப்பதா? என்பதை முடிவெடுக்க வேண்டும்.

பல இடங்களில் அனுமதி மறுக்கப்படுவதால் தான் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே அனுமதி மறுக்கும் முன்பு முழுமையாக விசாரித்து அனுமதி மறுப்பதோ, வாங்குவதோ செய்யவேண்டும். இதையும் மீறி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டத்தால் மாவட்ட எஸ்.பி.க்களும், சரக டிஐஜி-க்களும் தான் பொறுப்பேற்கவேண்டும் என கூடுதல் டிஜிபி சங்கர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.