கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டத்தில் உற்பத்தியாகும் தேனுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், அப்பகுதி தேன் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை முறையில் தேனீக்களை வளர்த்து தேன் உற்பத்தி செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, அம்மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம், தமிழகத்தின் தேன் கிண்ணம் என அழைக்கப்படுகிறது.
மார்த்தாண்டம் மட்டுமின்றி, அதைச் சுற்றியுள்ள காப்புகாடு, குழித்துறை, மஞ்சாலுமூடு, முழுக்கோடு, அருமனை, களியல், கடையாலுமூடு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்கள், பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தேன் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மார்த்தாண்டம் தேன் உட்பட 11 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இப்புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றது தேன் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே குமரி கிராம்புக்கு புவிசார் குறியீடு கிடைக்துள்ள நிலையில், இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற ஒரே மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
– சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.