தீபாவளி என்பது, நீண்ட, நெடிய மரபுகளைக் கொண்டதொரு மகத்தான பண்டிகை. வாத்சானார், தமது நூலில், இதை “யட்ச ராத்ரி”எனவும், அமாவாசை இரவில் வருவதால் “சுக ராத்ரி”எனவும் எழுதுகிறார். கி.பி. 1117 ல் சாளுக்கிய திருபுவன மன்னர், ஆண்டுதோறும், சாத்யாயர் எனும் அறிஞருக்கு, தீபாவளி பரிசு கொடுத்த விபரம் கன்னட கல்வெட்டு ஒன்றில் காணப்பட்டுள்ளது.
கி.பி.1250ல் லீலாவதி எனும் மராட்டிய நூலில் தீபாவளி எண்ணெய் ஸ்நானம் பற்றியதொரு குறிப்பு காணப்படுவதாக அறிகிறோம். புராணங்கள் இதை பெரிய தீபாவளி என குறிப்பிடுகிறது. காரணம் வேறு சில சிறிய அளவிளான தீபாவளி திருநாள் இருப்பதால்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மது, கைபர் என்ற இரு அரக்கர்கள்,வேதங்களை எடுத்துச் சென்று, பாதாள லோகத்தில் மறைத்து வைக்க,அதை மீட்டெடுக்க மஹாவிஷ்ணு, வராக அவதாரமெடுத்துச் செல்கிறார்.அப்போது , பூமாதேவியின் ஸ்பரிசம் காரணமாக, இருவருக்கும் “பௌமன்”எனும் பிள்ளை பிறக்கிறது.வளர்ந்த பின், “ப்ராகஜ்யோதிஷா”எனும் இடத்திலிருந்து மோசமான ஆட்சியைத் தருகிறான். (இவ்விடம் தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் வருகிறது). அனைவரும் சொல்லொண்ணாத் துன்பம் அனுபவித்து, நரன் ஆகிய மனிதன், அசுரன் போன்று துன்பப்படுத்துவதால் அவனை “நரஹாசூரன்” என அழைக்கலாயினர்.. இங்கு இருந்துதான், தவம் செய்து பிரும்மாவிடம் பலவரங்களைப் பெற்றுத் தன் அட்டகாசத்தை அதிகப் படுத்தினான். தன் தாய் மூலமே தமக்கு இறப்பு வரவேண்டுமென்று வரமும் அதில் அடக்கம். அசுர வதத்தின் போது பிறப்பெடுத்ததும் ஓர் காரணமாக இருக்கலாம்.
மூன்று லோகங்களிலும்,. இவனது கொடுமை தாங்க முடியாது, அனைவரும் முறையிட,மஹாவிஷ்ணு அதைக் களைய கிருஷ்ண அவதாரம் எடுத்தார். அதே நேரம்,பூமாதேவி,சத்ய பாமாவாக அவதரித்தார்.இருவரும் மணந்தபோது, மகனைப் பற்றிய நினைவுகள் அவளுக்கு இல்லை..கிருஷ்ணர் அவனை வதம் செய்யப் புறப்பட்ட போது, பாமா தானும் வருவதாக கூறினாள். வாள் போர், வில் போர்களில் நன்கு பயிற்சி பெற்றவராகையால்,அவளையும் அழைத்துச் சென்று முதலில் அவனது கோட்டைகளை இடித்து,போர் செய்கையில் அசுரன் முடிவு தெரிந்ததால் ,மயங்கியது போல நடிக்க, கோபம் கொண்ட பாமா, தன் அம்புகளினால்அசுரனை வதைத்தெறிந்தாள். அம்மா என் அவன் அலறிய போது அவன் தன் மகன் எனப் புரிந்தது..
அன்னை மனம் சிறிது தவித்தாலும், அவனது செய்கைகளால் வெறுக்க ப்பட்டான். தனக்கு இப்படி ஒரு மகன் வேண்டாமென சொல்லி, அவன் இறந்த நாளை தீபங்கள் ஏற்றிக் கொண்டாடவும், ஒருவர் இறந்த பின்பு செய்யப்படும்,எண்ணெய்க் குளியல் புனிதமாகிடவும், அன்றய தினம் எண்ணெயில் மஹாலக்ஷ்மி வாசம் செய்திடவும், ஒவ்வொரு வீட்டுத் தண்ணீரிலும் கங்காதேவி எழுந்தருளவும், வரங்களைப் பெற்றுக் கொண்டாள். ஆகவே அது தீமை ஒழிந்த நாள். அதை அனைவரும் புத்தாடை உடுத்தி,இனிப்பு சாப்பிட்டு,மத்தாப்புகள் கொளுத்தி, விருந்தோம்பல் செய்து மகிழ்கின்றனர். இப்படி ஒரு ஆனந்த நிலை கிடைக்க வேண்டும் என்பதற்காக நமது முன்னோர்கள் இது போன்ற பண்டிகைகளைத் தோற்றுவித்தனர்.
“உள்ளத்தில் ஆத்ம ஜோதியை”ஏற்றுவதே,தீபாவளிக் திருநாள் என்பார் ரமணமகரிஷி. நரகாசூரன் மறைந்த மகிழ்ச்சியில்,ஸ்ரீகிருஷ்ணர், தனது சகோதரி சுபத்திரா வீட்டிற்கு சென்று,ஆசி கூறி வேண்டியதைச் செய்ய, தங்கையும் ,அண்ணனை வரவேற்று உபசரித்து மகிழ்ந்தாள். அதேபோல இன்றளவும், பல மாநிலங்களில் “பாவ்-பீச்” என்று,தீபாவளியின் அடுத்த நாளைக் கொண்டாடுவர்.
சீக்கியர்கள் “பண்தீ சோர் திவஸ்” எனும் பெயரில் கொண்டாடுவர். இந்த தினத்தில்தான், பொற்கோயில் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டது. சமணர்கள், மஹாவீரர் முக்தி பெற்ற தினமாக,இதைக் கொண்டாடுகின்றனர்.
வால்மீகி ராமாயணத்தில் ஸ்ரீராமர், இலங்கேஷ்வரன் இராவனேஷ்வரனை வெற்றி கொண்ட பின், திரும்பிய நாளாக இதனைக் கொண்டாடுகின்றனர் என படித்திருக்கிறோம். வடக்கே புனித நீராடல் ,கங்கையில் ஸ்நானம் ஆகியவைகளுடன், எமதர்ம வழிபாடும் செய்வர். எமனுக்கு,யமுனா என்கிற தங்கை உண்டு. இந்நாளில் அவளுக்கு பரிசுகள் கொடுத்து, அவளும் வாழ்த்து பெற்று மகிழ்ந்ததை வைத்து இந்த நாளைக் கொண்டாடுவர். இவ்வாறு ஒரு பண்டிகை அனைவராலும் கொண்டாடப்படுவது அபூர்வம்.
அத்தகைய தனிச் சிறப்பை தீபாவளி பெற்றிருக்கிறது என்பதே அவ்விழாவில் பொதிந்து கிடக்கும் மகிழ்ச்சிப் பரவசத்தை பறைசாற்றும்.
“உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி,
ஊரெங்கும் மகிழ்ந்து
ஒன்றாக கலந்து,
உறவாடும் நேரமடா”
எனச்சொல்லி மேலும்
“”சித்திரப் பூ போல
சிதறும் மத்தாப்பு,
தீயேதும் இல்லாமல்
வெடித்திடும் கேப்பு””
என தனக்கே உரிய பாணியில் இப்பண்டிகையை , தமது பாடல்களில் வரிகளாய்த் தவழவிட்டு,பரவசப்படுவார் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
- சுப்பிரமணியன்