திரைப்படங்களில் இயக்குநர்கள் முடிந்தவரை புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளை தவிர்த்தல் நல்லது எனவும் இதுவரை யாரும் நடித்திராத வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதே ஆசை
என்றும் நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாயுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வருகிற 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக கோவை வந்த சந்தானம் அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது;
டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் திகில் படமாக வெளிவர உள்ளது. இது ஒரு வித்தியாசமான பேய் படம். இது திகில் கலந்த நகைச்சுவை படம் என்பதால் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும். இந்த படம் வெற்றி பெற்றால் இதன் தொடர்ச்சி வெளியாகும். இன்றைய குழந்தைகளுக்கு பேய் பயம் பெரிதாக இல்லை. இதனால் ஜாலியாக ஒரு கதையை சொல்லலாம் என்ற அடிப்படையில் தான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், முனிஸ்காந்த், ஸ்ருதி, லொள்ளு சபா டீம் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
அடுத்ததாக வடக்குப்பட்டி ராமசாமி என்ற படம் வெளிவர உள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி கோவையை கதைக்களமாக வைத்துதான் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது கதாநாயகனாக நடித்து வருவதால், நகைச்சுவை நடிகரா, கதாநாயகனா என என்னிடம் கேட்டால் இட்லி வேண்டுமா, தோசை வேண்டுமா என்பது போல இருக்கிறது. நகைச்சுவை நடிகராக இருந்தபோது எவ்வித கவலையும் இல்லாமல் இருந்தேன்.
தற்போது கதாநாயகனாக நடிப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். மீண்டும் நல்ல கதை வந்தால் நகைச்சுவை கேரக்டரில், பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிப்பேன். இன்றைக்கு மல்டி ஸ்டார் படம் தான் ட்ரெண்ட். எவ்வளவு பெரிய நாயகனாக இருந்தாலும் கதை தான் நாயகன். இதுவரை யாரும் நடித்திராத வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. திரைப்படங்களில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளை இயக்குனர்கள் தவிர்த்தால் சிறப்பாக இருக்கும். சினிமா மூலம் இந்தத் தலைமுறைக்கு நல்ல கருத்துகளை எடுத்து சொல்ல வேண்டும்.
இவ்வாறு நடிகர் சந்தானம் தெரிவித்தார்.
தொடர்ந்து காலையில் மது அருந்துவோர் குறித்த அமைச்சர் முத்துசாமியின் கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “டிடி ரிட்டன்ஸ் குறித்து பேச வந்துள்ளேன். சரக்கு பற்றி பேசினால் காலையிலேயே நான் சரக்கு போட்டு வந்ததாக நினைப்பார்கள்.” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா









