சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் பெய்து வரும் மழையால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. விடிய விடிய பெய்த கனமழை காரணமாக, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:
காற்றுழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறாது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட கரையோர பகுதிகளில் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் சில இடங்களில் கனமழையும் தொடரும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் அதி கனமழை தொடரும். காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம், சென்னை அருகே 100 கி.மீ தொலைவில் உள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் 4 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை அது கரையை கடக்கும். மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.