தமிழ்நாட்டில் நவம்பர் 30 வரை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.  குறிப்பாக தென்…

தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.  குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 27-ம் தேதி  ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.  இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 29-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 24) ஒருசில இடங்களிலும்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  திருவள்ளூர்,  ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:  கோவை பள்ளி மாணவியிடம் உணவு குறித்து தரக் குறையாக பேசிய விவகாரம் – ஆசிரியை அபிநயா பணியிட மாற்றம்.!

தொடர்ந்து நாளை (நவம்பர் 25) தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.  கடலூர்,  நாகப்பட்டினம்,  திருவாரூர்,  தஞ்சாவூர்,  புதுக்கோட்டை, ராமநாதபுரம்,  மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் நவம்பர் 26-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நவம்பர் 27 -ம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் நவம்பர் 28-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும்,  ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 28-ம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.