“கொங்கு பகுதிக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி” – அண்ணாமலை பேச்சு!

கொங்கு பகுதிக்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெற்ற ‘அத்திக்கடவு நாயகன்’ புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கொங்கு பகுதிக்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்று தெரிவித்தார்.

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்காகப் போராடியவர்களின் பங்களிப்பை இந்த நூல் தெளிவாக எடுத்துரைப்பதாக அண்ணாமலை கூறினார். மேலும், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பேசினார். அமெரிக்கா இந்தியாவிற்கு 50% வரி விதித்துள்ள நிலையில், விவசாயிகளின் நலனைக் காக்க பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார் என்றார். வரவிருக்கும் பட்ஜெட் விவசாயிகளை ஐந்து மடங்கு ஊக்குவிக்கும் எனவும், விவசாயிகளின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அண்ணாமலை தனது உரையில், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இரண்டாம் கட்டப் பணிகள் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆகஸ்ட் மாத இறுதிக்குள் திட்டத்தின் நீர்நிலைகள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வாழை கருப்பையா உள்ளிட்ட நான்கு விவசாயிகள் பிரதமரைச் சந்தித்து 25 நிமிடங்கள் பேசியுள்ளனர். அதன் விளைவாக, கொங்கு பகுதிக்கு மத்திய அரசிடமிருந்து ஒரு மகிழ்ச்சியான செய்தி விரைவில் வரும் என்றும், இது குறித்து அதிகாரிகள் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். இது அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் இரண்டாம் கட்டம் குறித்தோ, அல்லது விவசாயிகளுக்கு நன்மை தரும் வேறு ஏதேனும் திட்டம் குறித்தோ இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.