தோளில் துப்பாக்கியுடனும் அருகில் குழந்தைகளுடனும் உயிரியல் பூங்காவில் தலிபான்கள் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
ஆப்கானிஸ்தானில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து ஆட்சி அதிகாரத்தை தலிபான் கைப்பற்றி உள்ளனர். அந்த அமைப்பின் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் தலைமையில், ஆப்கானிஸ்தானில் தற்காலிக அரசை தலிபான்கள் அமைத்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தலிபான் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் முல்லா அப்துல் கனி பரதர், துணை செயல் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல் பல்வேறு துறைகளுக்கு அமைச் சர்களை தலிபான்கள் நியமித்துள்ளனர். ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றி ஒரு மாதம் ஆன நிலையில், இப்போது அங்கு தீவிர பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டில் போதிய உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் 5 வயதுக்கு உட்பட்ட ஒரு கோடி குழந்தைகள் தவித்து வருவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சண்டை முடிவுக்கு வந்துவிட்டதால் தலிபான்கள், தங்கள் குடும்பத்துடன் இப்போது இணைந்துள்ளனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் காபூல் உயிரியல் பூங்காவுக்கு சென்றுள்ளனர். மான் உள்ளிட்ட விலங்களை கண்டு ரசித்த அவர்கள், தங்கள் குழந்தைகளுக்கும் அதை காண்பித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
கிராமத்தில் இருந்து முதன்முதலாக காபூலுக்கு வந்துள்ள பல தலிபான் படையினருக்கு, இது புது அனுபவமாக அமைந்துள்ளது. தோளில் துப்பாக்கியுடனும் மறுபக்கம் குழந்தை களுடனும் அவர்கள் சென்ற பிக்னிக் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தலிபான் படையில் இருந்த 40 வயது அப்துல் காதிர் இப்போது உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றுகிறார். தனது நண்பர்களுடன் பிக்னிக் சென்ற அவர் கூறும்போது, எனக்கு விலங்குகளை பிடிக்கும். குறிப்பாக ஆப்கானில் காணப்படும் விலங்குகளை ரசிக்கிறேன். எனக்கு சிங்கங்களை அதிகம் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிகளுடன் உயிரியல் பூங்காவுக்கு வந்தது பற்றி கேட்டபோது, அதற்காக குழந்தைகள், பெண்கள் பயப்பட வேண்டாம் என்று அவர் சொன்னார். பின்னர் தலிபான் கள் குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.