பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரீஹம் கான் சென்ற கார் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இரண்டாவது மனைவி ரீஹம் கான். ரீஹம் கான் தனது முதல் கணவர் இஸ்ஜாஸ் ரீஹம் என்பவரை 1993-ம் ஆண்டு திருமணம் செய்து பின்னர் 2005 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதனை தொடர்ந்து இம்ரான் கானை ரீஹன் கான் 2014-ல் திருமணம் செய்துக் கொண்டார். பின்னர் அடுத்த ஆண்டே இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். இவர் ஒரு பத்திரிக்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் இஸ்லாமாபாத்தில், நேற்று உறவினர் திருமணத்தை முடித்து விட்டு காரில் வீடு திரும்பியப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருவரும் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு பைக்கில் தப்பிச்சென்றனர். அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த ரீஹம் கானுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காரில் ரீஹம் கானுடன் இருந்த காவலர்கள் அவரை மீட்டு வேறு காரில் பத்திரமாக அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சிக்குள்ளான ரீஹம், இம்ரான் கானின் ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதான் புதிய பாகிஸ்தானா எனவும் கோழைகள், குண்டர்கள், பேராசைக்காரர்கள் நிறைந்த நாட்டிற்கு வரவேற்பதாகவும் ரீஹம் கான் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.







