பிப்.25ம் தேதி நடந்த குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,  இத்தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த பிப்.25ம்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,  இத்தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த பிப்.25ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின் பல தேர்வு மையங்களில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறி இருந்ததாகவும், தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்களில் பதிவு எண்கள் தவறாக இருந்தாகவும், பல இடங்களில் வினாத்தாள் வெளியானதால் குளறுபடி ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

சென்னை, கடலூர், சேலம், தஞ்சை மாவட்டங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததால், தேர்வு தொடங்க தாமதமானது.தொடர்ந்து தாமதம் ஏற்பட்ட தேர்வு மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதுபோன்ற முதன்மை தேர்வுகளில் தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதையும் படியுங்கள் : ராஜபக்சே மீண்டும் பிரதமரா? – இலங்கை பிரதமர் அலுவலகம் விளக்கம்

இந்நிலையில் குரூப் 2 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இத்தேர்வை ரத்து செய்துவிட்டு உரிய முறையில் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் பிப்.25ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில், வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததன் காரணமாக பல்வேறு குளறுபடிகளுடன் தாமதமாக தேர்வுகள் தொடங்கியுள்ளன. பல முறைகேடுகள் நடந்துள்ளதன் காரணமாக, தகுதிவாய்ந்த தேர்வர்கள் தங்கள் வாய்ப்பினை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

https://twitter.com/EPSTamilNadu/status/1630126719591120896

டிஎன்பிஎஸ்சி தேர்வு போன்ற முக்கிய தேர்வுகளை முறையாக கையாளாத தமிழ்நாடு அரசை வன்மையாக கண்டிப்பதுடன், உடனடியாக பிப்.25ம் தேதி நடைப்பெற்ற தேர்வை ரத்துசெய்து, வேறு ஒருநாளில், உரிய முறையில் மறுதேர்வினை நடத்திட வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.