திருமங்கலம் ஃபார்முலாவை காட்டிலும் 20 மடங்கு பணப்புழக்கம் இருப்பதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி பெற வாய்ப்புள்ளது என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சாலை அமைக்கும் பணி, கழிவு நீர் ஓடை பராமரிப்பு பணி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அவர், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 62 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி, பாதாள சாக்கடை பராமரிப்பு பணி, கழிவுநீர் ஓடை பராமரிப்பு பணி உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டத்திற்கு முன்பாக சாலைகள் பராமரிக்கப்பட்டு தேர் எந்தவித பிரச்னையும் இன்றி செல்வதற்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
20 நாட்களுக்குள் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் நெடுஞ்சாலை துறைக்குச் சொந்தமான சாலைகளை சீரமைக்காவிட்டால்
பொதுமக்களுடன் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவேன். திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மிகக் குறைந்த அளவே
பெய்துள்ள காரணத்தால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானுர் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக கள ஆய்வு செய்து விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறியப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் கோரிக்கை வைக்க உள்ளேன் என்றார்.
திருமங்கலம் ஃபார்முலாவை காட்டிலும் 20 மடங்கு பணம் ஈரோடு கிழக்குத் தொகுதியில் புழக்கத்தில் இருந்துள்ளது. வாக்காளர்களை மண்டபத்தில் அடைத்து வைத்து உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படத்தை போட்டு காட்டி பணம் கொடுத்துள்ளனர். நாகாலாந்து, மேகாலயா தேர்தல் மட்டுமல்ல வரும் அனைத்து தேர்தலும் பாஜகவிற்கு தான் ஆதரவாக அமையும் என தெரிவித்தார்.
இதுவரை பாஜக எந்த எம்எல்ஏக்களையும் விலைக்கு வாங்கியதில்லை. கட்சிகளில் இருக்கும் குரூப் பாலிடிக்ஸ் காரணமாக அவர்கள் பதவிக்கு ஆசைப்பட்டு வெளியே வருவதால் சில மாநிலங்களில் ஆட்சி மாற்றம் நடைபெறுகிறது. தற்போது தமிழகத்தில் குரூப் பாலிடிக்ஸ் இல்லை, இனி நடக்கலாம்.
தமிழகத்தில் மருங்காபுரி மதுரை கிழக்கு இடைத்தேர்தலுக்கு பின்னர் எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதே கிடையாது. ஆனால், அதிக பணப்புழக்கம் இருந்ததால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் ஆளும்கட்சியே வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றார்.
-ம.பவித்ரா